அறிந்ததும்... அறியாததும்...
-
புதிய ஏற்பாட்டின் முன் அட்டை
"பைபிளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்
ஆறுமுகநாவலர்' எனத் தமிழ்மணியில் வெளியான துணுக்குச் செய்தியை மறுத்துள்ள
வரலாற்று ஆசிரியர் சி.டேவிஸ் என்பவர், அவ்வாறு மறுப்பதற்கான கீழ்க்காணும்
சில ஆதாரங்களை முன் வைத்துள்ளார்.
"கிறிஸ்தவர்களின் பைபிளை (வேதாகமத்தை) முதன் முதலில் தமிழில்
மொழிபெயர்த்தவர் ஜெர்மானியரான சீகன்பால்கு என்பவர். 1682-இல் பிறந்த
சீகன்பால்கு இந்தியாவில் உள்ள தரங்கம்பாடிக்கு வந்து கி.பி.1715-ஆம் ஆண்டு
புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதற்கு
ஆதாரமாக உள்ளது சீகன் பால்குவின் புதிய ஏற்பாட்டின் முன் அட்டை. ஆனால்,
ஆறுமுக நாவலரோ கி.பி.1822-ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ் வேதாகம
மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட பீட்டர் பெர்சிவல் என்பவருக்கு ஆதரவாகத்தான்
ஆறுமுக நாவலர் செயல்பட்டார் என்பதுதான் உண்மை.
மேலும், "1708-இல் சீகன்பால்கு என்ற ஜெர்மானியரால் பைபிள்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரால் முடிக்க முடியாத இப்பணியை பெஞ்சமின்
சூல்ச் என்பவர் முடித்துள்ளார். 1710-இல் இது அச்சிடப்பட்டுள்ளது. இவ்வாறு
"எனது இந்தியா' என்ற நூலில் (பக்.253) பதிவாகியுள்ளது' என்று டி.தங்கசுவாமி
என்பவரும் பதிவுசெய்துள்ளார்.
இதில் யார் கூறுவது உண்மை? ஆய்வு செய்யப்பட வேண்டிய வரலாற்றுப்
பக்கங்கள் இவை! என்றாலும், அறியாததை அறிந்து கொள்வதும், தவறுகள்
திருத்தப்படுவதும், உண்மை பதிவு செய்யப்படுவதும் தானே நியாயம்?
No comments:
Post a Comment