Saturday, February 2, 2013

மணலில் எழுதிய நூல்கள்!

மணலில் எழுதிய நூல்கள்!


1533-ஆம் ஆண்டிலிருந்து 1577-ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் பாத்ரே ஜோஸ் என்னும் பாதிரியார். இவர் ஒரு முறை ஆதிவாசிகளால் பிரேசில் நாட்டில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடற்கரைப் பகுதியில் குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு மேல் போக முடியாமல் காவலில் வைக்கப்பட்டார் பாத்ரே ஜோஸ். அந்தக் கடற்கரை மணலில் ஒரு சிறிய குச்சியைக் கொண்டு கவிதை எழுதுவாராம். அதை அப்படியே மணப்பாடம் செய்துகொண்டு அடுத்த கவிதையை எழுதுவாராம். இவ்வாறு 5756 பாடல்கள் கொண்ட ஒரு மத நூலை எழுதியுள்ளார். மூன்றாண்டுக்கு பின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் தான் மனப்பாடம் செய்தவற்றை காகிதத்தில் எழுதினார். பாத்ரே ஜோஸ் தனது வாழ்நாளில் எண்ணற்ற தேவாலயங்களைக் கட்டினார்' என்று அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
இதே போல, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாசர் என்பவர் தமிழ் நீதி நூல் ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூலின் பாடல்களை சிவப்பிரகாசர் கடற்கரை மணலில் எழுத, பின்னர் அவருடைய சீடர்கள் அவற்றைத் தொகுத்து, ஏடுகளில் பதிவு செய்தனராம். அந்நூலின் பெயர் "நன்னெறி'. 40 பாடல்களைக் கொண்டது. இதில் கல்வியின் மேன்மை, அறிஞர்களின் உயர்வு, பெரியோர் பெருமை, நட்பு, இன்சொல் பேசுவதன் சிறப்பு, உதவிசெய்து வாழ்வதன் சிறப்பு முதலிய நன்னெறிகள் கூறப்பட்டுள்ளன. ஆக, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை இவர்கள் நிரூபித்துவிட்டனர்.

வண்டிருக்கும் பழமா?

வண்டிருக்கும் பழமா?



"காவடிச்சிந்து' அண்ணாமலை ரெட்டியார் தனது இளவயதில் ஒருமுறை ராமநாதபுரம் மன்னரைக் காணச் சென்றார். அப்போது அங்கு மாம்பழக் கவிச்சிங்கக் கவிராயர் இருந்தார். அண்ணாமலை ரெட்டியாரும், கவிராயரும் மட்டுமே இருந்தனர். ஒருவரை மற்றவர் அறிந்திருக்கவில்லை. ரெட்டியார் கவிராயரை நோக்கி,
""தாங்கள் யார்?'' என வினவினார்.
""உலகெல்லாம் புகழ்ந்தோதுதற்கரிய மாம்பழம்'' எனக் கவிராயர் விடை பகர்ந்தார். அதைக் கேட்ட ரெட்டியார்,
""வண்டிருக்கும் பழமா? வண்டில்லாத பழமா?'' என எதிர் வினாத் தொடுத்தார். எதிர்பாராத இவ்வினாவைக் கேட்ட கவிராயர், பதில் சொல்வது எவ்வாறு எனத் திகைத்தார். வண்டிருக்கும் பழம் எனில், அது இறைவனுக்குப் படைக்கவும், மன்னருக்கு அளிப்பதற்கும் ஆகாது. வண்டில்லாத பழமெனில் அதில் சுவையிருக்காது என்பதை அறிந்திருந்த கவிராயர் விடை கூறாமல், ""தாங்கள் யார்?'' என ரெட்டியாரை நோக்கிக் கேட்டார்.
ரெட்டியார் நகைச்சுவை தோன்றத் தனது பெயரை நேரடியாகக் கூறாமல், ""தமைய பர்வதம்'' (தமையன்-அண்ணா, பர்வதம் - மலை) என விடையளித்தார்.
உடனே கவிராயர், ""நீர் பிஞ்சிலே பழுத்த நல்ல பழம்'' எனப் பெருமையுடன் ரெட்டியாரை வாழ்த்தி, அவர் பாடிய காவடிச்சிந்தில் உள்ள சில பாடல்களைக் கேட்டு மகிழ்வுற்றாராம்.