Saturday, March 23, 2013

புலவர்களைக் காக்கும் புரவலர்கள் யார்?

புலவர்களைக் காக்கும் புரவலர்கள் யார்?

பண்டைத் தமிழகத்தில் தமிழ்க் கடலின் ஆழம் கண்ட புலவர்களை மன்னர்களும் வள்ளல்களும் பாதுகாத்ததன் மூலம் தமிழ் வளர்த்தனர். தமிழ் வளர்த்த வள்ளல்களைப் புலவர்கள் கடவுளுக்கு அடுத்த நிலையில் பாடினர்.
÷இராமசந்திரக் கவிராயர் என்னும் நகைச்சுவைப் புலவர் கடவுளுக்குப் பெருமை தரக்கூடிய புராணக் கதைகளைக் குறைவுள்ளது போல் பாடிப் பெருமைப்படுத்தியுள்ளார். அப்பாடல்களை "நிந்தாஸ்துதி' என்பர்.
÷சிவபெருமான் பத்மாசுரனுக்கு அவன் யார் தலையில் கைவைத்தாலும் தலைவெடித்துவிடும் என்று வரம் கொடுத்தார். அவன் சிவபெருமான் தலையிலேயே கை வைக்க வந்தான். அவனுக்குப் பயந்து முக்கண் சாமியாகிய சிவபெருமான் நீண்ட காலம் மூங்கிலிலே ஒளிந்திருந்தார்.
÷முகுந்த சாமியாகிய திருமால் பழைமையான திருப்பாற்கடலில் போய்ப் பள்ளி கொண்டார். நான்கு தலைகளையுடைய சாமியாகிய பிரமன் தாமரை மலரில் இருந்து கொண்டார். "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசித்து "தகப்பன்சாமி' என்று பெயர் பெற்ற முருகன் மலைகளில் இருந்து கொண்டார். வயிற்றுச் சாமியாகிய விநாயகர் பக்தர்கள் கொடுக்கும் உணவுக்காக வழிகளில் இருந்தார்.
÷ஐந்து சாமிகளும் இவ்வாறு ஐந்திடங்களில் அமர்ந்ததனால், உலகை, தமிழ்ப் புலவர்களைக் காக்கும் மற்றோர் சாமி, யார் என்றால் மயிலையிலே பொன்னப்பசாமி என்பவர் பெற்ற வேங்கடசாமி என்னும் வள்ளலேயாவார் என்ற பொருளில்,
மூங்கிலிலே ஒளிந்திருந்தான் முக்கண் சாமி
முதிய கடல் போய்ப்படுத்தான் முகுந்த சாமி
தாங்கமலப் பொகுட்குறைந்தான் தலைநால் சாமி
வாங்கியுண்ண வழிகாத்தான் வயிற்றுச் சாமி
வாணருக்கிங் குதவுபர்யார் மற்றோர் சாமி
ஓங்கியசீர் மயிலையிலே பொன்னப்பசாமி
உதவியவேங் கடசாமி உசித வேளே!
என்று நகைச்சுவையும் தமிழ்ச்சுவையும் கமழப் பாடியுள்ளார்.

No comments:

Post a Comment