மணலில் எழுதிய நூல்கள்!
1533-ஆம் ஆண்டிலிருந்து 1577-ஆம் ஆண்டு வரை
வாழ்ந்தவர் பாத்ரே ஜோஸ் என்னும் பாதிரியார். இவர் ஒரு முறை ஆதிவாசிகளால்
பிரேசில் நாட்டில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடற்கரைப்
பகுதியில் குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு மேல் போக முடியாமல் காவலில்
வைக்கப்பட்டார் பாத்ரே ஜோஸ். அந்தக் கடற்கரை மணலில் ஒரு சிறிய குச்சியைக்
கொண்டு கவிதை எழுதுவாராம். அதை அப்படியே மணப்பாடம் செய்துகொண்டு அடுத்த
கவிதையை எழுதுவாராம். இவ்வாறு 5756 பாடல்கள் கொண்ட ஒரு மத நூலை
எழுதியுள்ளார். மூன்றாண்டுக்கு பின் சிறையிலிருந்து விடுதலை
செய்யப்பட்டவுடன் தான் மனப்பாடம் செய்தவற்றை காகிதத்தில் எழுதினார். பாத்ரே
ஜோஸ் தனது வாழ்நாளில் எண்ணற்ற தேவாலயங்களைக் கட்டினார்' என்று அவரது
வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.
இதே போல, 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாசர்
என்பவர் தமிழ் நீதி நூல் ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூலின் பாடல்களை
சிவப்பிரகாசர் கடற்கரை மணலில் எழுத, பின்னர் அவருடைய சீடர்கள் அவற்றைத்
தொகுத்து, ஏடுகளில் பதிவு செய்தனராம். அந்நூலின் பெயர் "நன்னெறி'. 40
பாடல்களைக் கொண்டது. இதில் கல்வியின் மேன்மை, அறிஞர்களின் உயர்வு, பெரியோர்
பெருமை, நட்பு, இன்சொல் பேசுவதன் சிறப்பு, உதவிசெய்து வாழ்வதன் சிறப்பு
முதலிய நன்னெறிகள் கூறப்பட்டுள்ளன. ஆக, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
என்பதை இவர்கள் நிரூபித்துவிட்டனர்.
No comments:
Post a Comment